15
ஆனவரை மகிபாலனை விட்டு தள்ளி இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள் மிருதுளா .அவன்மீது ஏகப்பட்ட சந்தேகங்கள் அவளுக்கு இருந்தது .ஆனால் அவன் அருகில் வந்து விட்டானானால் அது எதைப் பற்றியும் யோசிக்க விடாமல் செய்து கொண்டிருந்தான். இயல்பாக அவள் தேகம் தொட்டான். சுலபமாக அவள் மனதை சூறையாடினான். இருபுறமும் பற்றி எரியும் மெழுகுவர்த்தியாக அவனிடம் எரிந்து கொண்டிருந்தாள் மிருதுளா.
இப்படி மனம் கொண்டவனையே குற்றவாளியாக நிரூபிக்கும் சூழல் எந்தப் பெண்ணிற்கும் வரக்கூடாது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் .முடிந்தவரை மகிபாலனிடம் குறைகளை தேடினாள் .இப்போதும் இது விஷயமாக தாய் தந்தையிடம் பேசலாம். ஆனால் அதிலும் சிக்கல் இருக்கிறது.
“கலிவரதனுக்கு அவருடைய தொழில் முக்கியம் .மதுராவைத்தான் அவர் தன் தொழில் வாரிசாக உருவாக்கி பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தார். இப்போது அவள் இல்லாமல் போய்விட்ட இந்த நிலையில் அவரது தொழிலை கவனிக்க இருக்கும் ஒரே ஆள் மகிபாலன் தான். அவனை அதிருப்திபடுத்த தந்தை விரும்பமாட்டார். அப்படியே சூழ்நிலை உருவானாலும் அதனால் அவருக்கு மிகுந்த மன வருத்தம் ஏற்படும். எனவே மகிபாலனை பற்றி ஐயமற தான் அறிந்தபின் தன் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தலாம் என்று முடிவெடுத்தாள் மிருதுளா.
இந்த யோசனையின் ஊடே அவளுக்கு வேறு ஒரு விஷயம் பளிச்சிட்டது. அப்பாவின் தொழிலை மதுரா தானே கவனித்துக் கொண்டிருந்தாள் .மகிபாலனும் அந்த தொழிலை அடைய முயற்சிக்க… அதற்காக மதுராவை காதல் என்ற பெயரில் பயன்படுத்தினானோ.. இதோ இப்போது என்னிடம் போல… இது போலவே தான் மதுராவிடமும் நடந்து கொண்டானோ…? இவன் இப்படியே நடந்துகொண்டால் அதனை கடந்து வர எந்த பெண்ணாலும் முடியாது. அவனுடைய அணைப்பின் இறுக்கமும் முத்தங்களின் ஈரமும் தன் உடலில் குருதிக்கு இணையாக தங்கிவிட்டதை உணர்ந்தாள் மிருதுளா.
ஆனால் மதுரா என்னைவிட புத்திசாலி அவள் மகிபாலனை தெரிந்து கொண்டிருக்க வேண்டும் …அதனால் தான் இருவருக்குள்ளும் பிரேக்கப் உண்டாகியிருக்கிறது .அந்த நேரத்தில் எழுந்த ஏதோ பிரச்சனையில் தான் மதுரா காணாமல் போயிருக்க வேண்டும் அல்லது காணாமலடிக்கப்பட்டு இருக்கவேண்டும் .இப்போது அக்காவிற்கு பிறகு தங்கை என இவனின் பித்தலாட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மிருதுளாவினால் சரசரவென யூகங்கள் கோர்க்கப்பட்டு மலர் மாலையாக உருவாகின .இவனது ஏமாற்றுத் தனத்தை எல்லாம் எனக்கு உணர்த்தத்தான் மதுரா அடிக்கடி என் கண்களுக்கு தெரிகிறாள் .என்னை எச்சரிக்கிறாள்.
உனக்கு மட்டும் தானே தெரிகிறாள் அது எப்படி ? என்று அன்று கேட்டானே பாதிக்கப்பட்டவள் அவளுடைய தங்கையாகிய நான் தானே ?என்னை மட்டும் தானே எச்சரிக்க விரும்புவாள் ? அடிக்கடி தன்னுள் மனதிற்குள் மகிபாலனை நம்பாதே என ஒலிக்கும் மதுராவின் குரலை இப்போதும் உணர்ந்தாள்.
மிருதுளா மகிபாலனை அலுவலகத்தில் விசாரிக்க எண்ணினாள். அன்று கந்தசாமி சொன்னதை கூட நம்பாமல் போனேனே …தன்னையே நொந்து கொண்டாள் .அவன் நீட்டிய இடத்தில் எல்லாம் அன்று கையெழுத்து போட்டதை வெட்கத்துடன் நினைத்தாள் . அந்த நேரம் என்னை எவ்வளவு கேவலமாக நினைத்திருப்பான் …ஒரு விரலால் ஆட்டி விட்டால் போதும் தலையாட்டிக் கொண்டே இருக்கும் இந்த பொம்மை என்றுதானே நினைத்திருப்பான் .அடிக்கடி அவன் தன்னை பொம்மை என்று வர்ணிப்பதை மன வலியோடு நினைத்துக்கொண்டாள்.
” வீட்டிற்குள்ளேயே இருப்பது ரொம்பவும் போர் அடிக்கிறது அப்பா. நான் இன்று நம் கம்பெனிக்கு போய் வரலாம் என்று நினைக்கிறேன் ” ஞ
” ஏன்டா குட்டி அனாவசியமாக உன்னை கஷ்டப்படுத்தி கொள்கிறாய் ? “கலிவரதன் பாசமாக கேட்க…
” பரவாயில்லை விடுங்க மாமா …அவளும் ஒரு நாள் நம் தொழிலுக்குள் வந்துதானே ஆக வேண்டும் .இப்போதே கொஞ்சம் கொஞ்சம் ஆபீஸ் பக்கம் வந்து பார்க்கட்டும் ” என்றபடி வந்தான் மகிபாலன்.
இவன் இல்லாத நேரம் அப்பாவிடம் பேச வேண்டும் என்று நினைத்து ஆரம்பித்தேன் திடீரென்று இப்படி பிசாசு போல் வந்து நிற்கிறானே மிருதுளா அவனை முறைத்தாள்.
” எங்கே வந்தீர்கள் ? ”
” இப்போது என்னை நினைத்தாயே குட்டி .எனக்கு உன் நினைவு தெரிந்ததே …அது தான் ஓடி வந்துவிட்டேன் ” இரு கைகளையும் விரித்து தலை குனிந்து அவளுக்கு ஒப்புக்கொடுத்தவன் மாமா அருகில் இருக்கும் எண்ணமின்றி உட்கார்ந்திருந்தவளின் தலை பற்றி உச்சி முகர்ந்தான்.
” நான் ஒன்றும் உங்களை நினைக்கவில்லை ” ஆத்திரத்துடன் அவனை தள்ளினாள்.
” திங் ஆப் எ டெவில் அன்ட் டெவில் இஸ் ஹியர் ” அவளிடம் முணுமுணுத்தவன் ” மாமா இப்போது மிருது என்னைப் பற்றி தானே பேசிக் கொண்டிருந்தாள் ? ” பஞ்சாயத்து வைத்தான்
” ஆமாம் ஆமாம் மகி …உன்னைப் பற்றியேதான் ” வஞ்சனையில்லாமல் தலையாட்டி வைத்தார் கலிவரதன்.
” நீ மகி கூடவே நம்ம ஆபீஸிற்கு போய்வந்து விடுடா குட்டி ” சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டார்
” என்னது இவன் கூடவா…. இவனுடன் போனால் நான் அங்கே எனக்கு தேவையான தகவல்களை எப்படி எடுப்பது மிருதுளா விழித்துக்கொண்டு இருக்க அவள் தோள் உரசியபடியே அருகே அமர்ந்தவன் ” இப்போதைய சூழ்நிலையில் நான் தானே உன் டெவில் குட்டி ? ” என்றான் கொஞ்சலாக.
” ஆமாம் பிசாசு ரத்தம் உறிஞ்சும் மாயப் பிசாசு ….வேம்பையர் ” வெறுப்போடு சொன்னவளின் மனதிற்குள் அன்று அவன் கொடுத்த உயிரை உறிஞ்சும் முத்தம் இருந்தது.
” தேங்க்யூ்… தேங்க்யூ வெரி மச் ” சிறந்த தொழிலதிபருக்கான டெமிங் விருது பெற்றவகை போல் தலைகுனிந்து நிமிர்ந்தான்.
” தள்ளி போடா அந்த பக்கம் ” உரசிக்கொண்டு அமர்ந்திருந்தவனின் தோளில் குத்தினாள்.
” டா ” குத்திய கையை பிடித்தபடி ஆச்சரியமாகக் கேட்டான்.
” ஆமாம்டா… அப்படித்தாண்டா… சொன்னேன்டா…” பெயர் சொல்வது கூட பிடிக்காமல் அத்தான் என்று அழைக்க சொல்பவனுக்கு இந்த ‘டா ‘ பெரும் தண்டனை என்று நினைத்தாள்.
வெறுப்போடு தன்னை உதறும் மகிபாலனை அவள் எதிர் பார்த்திருக்க அவன் அவளை இறுக்கி அணைத்தான் .” நூறு அத்தான் சொன்னாலும் இந்த ஒரு ‘ டா ‘ வுக்கு ஈடாகாது போலவே ” அவனது உல்லாசத்தின் முடிவில் மிருதுளா மீண்டும் ஒரு முறை அவனது ரத்தக்காட்டேரி முத்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
” பிசாசு …காட்டேரி… ரத்த காட்டேரி ” அவனிடமிருந்து விடுபட்ட மென்று துப்பிய கரும்புச்சக்கையான தனது உதடுகளை தொட்டுப் பார்த்தபடி அவனுக்கான வசவுகளை இறைத்தாள் .
பாக்கெட்டில் இருந்து தனது கர்சீப்பை எடுத்து அவளது இதழ்களை அழுத்தித் துடைத்துவிட்டு தன் உதடுகளையும் துடைத்துக் கொண்டு அவள் கைபற்றி எழுப்பினான் ” வா ஆபிஸிற்கு போகலாம்“
சலனமின்றி முன் நடந்த அவனை வெறுப்பாய் பார்த்தபடி தொடர்ந்தாள்.
” இங்கே எதை தேட வந்தாய் ? ” அலுவலகத்தில் அவளை எம்டி நாற்காலியில் அமர வைத்துவிட்டு அவள் அருகிலேயே டேபிளில் சாய்ந்து உட்கார்ந்தபடி கேட்டான்.
” இங்கே தேடுவதற்கு ஏதாவது இருக்கிறதா என்ன ? ” மிருதுளா அவன் கண்களை கூர்ந்து பார்த்தாள்.
பளிச்சென்று சிரித்தவன் அவள் கன்னத்தில் லேசாக தட்டினான்” புத்திசாலிடா குட்டி நீ .நினைப்பதை உடனுக்குடன் புரிந்து கொள்கிறாய் ”
” அந்த அளவு புத்தி இருந்தால் இப்படி உங்களிடம் மாட்டிக்கொண்டு
முழிப்பேனா. ? ”
” மாட்டிக்கொண்டு விழிப்பது நீயா நானா ? ”
” மாட்டி வைத்திருப்பது நீங்கள்… விழித்துக் கொண்டிருப்பது நான்…”
” க்ளாஷ் …அசத்தல் இந்த அளவு புத்திசாலித்தனம் கொஞ்ச நாட்கள் முன்பு இல்லையே குட்டி .மதுரா வருகிறாள் என்னை விரட்டுகிறாள் என்று ஏதேதோ பேத்திக் கொண்டிருந்தாயே ? ”
” அது ஒன்றும் உளறல் இல்லை. உண்மை அக்காவை நீங்கள் ஏதோ செய்துவிட்டீர்கள் .அதனை நான் கண்டு பிடிக்காமல் விடமாட்டேன் ”
” ரொம்ப சந்தோசம் உன் மூலமாக மதுராவின் விபரம் எனக்குத் தெரிய வந்தால் எனக்கும் சந்தோஷம் தானே .சரி நீ வந்த வேலையை பார் .நான் ஃபேக்டரி ரவுண்டுக்கு போய்விட்டு வருகிறேன் “.சொன்னதோடு அவன் போயிருந்தால் மிருதுளாவிற்கு ஒன்றும் தெரிந்திருக்காது .கிண்டலாக பார்த்தபடி அந்த அலுவலக அறையில் இருந்த எல்லா அலமாரிகளின் சாவியையும் அவள் முன்னால் எடுத்துப் போட்டுவிட்டு போனதுதான் அவளை மிகவும் பாதித்தது .எரிச்சலோடு அந்த சாவிகளை எடுத்து எறிந்தாள்.
இங்கு அவள் வந்ததற்கு மற்றொரு முக்கிய காரணம் மதுராவின் செல்போன் .அவள் கணிப்புப்படி மதுராவின் நிலைக்கு மகிபாலன் காரணமாக இருப்பானானால் அவளுடைய புது போன் இப்போது மகிபாலனிடம் தான் இருக்கும் என்று நினைத்தாள் .பழைய போன்களையே பத்திரமாக வைத்திருப்பவன் புது போனை நிச்சயம் பாதுகாப்பாகவே வைத்திருப்பான் .அது வீட்டில் இல்லையென்றால் இங்கே தான் இருக்கும் என்று நினைத்தாள் .அதனை தேடி எடுக்கவே வந்தாள் .ஆனால் இவனோ அதனை உணர்ந்து கொண்டானோ …
எரிச்சலோடு எழுந்து ஆபீஸ் அறையைவிட்டு வெளியே வந்தாள். அந்த அறை இரண்டாவது மாடியில் இருக்கும் .அங்கிருந்தபடியே கீழ் தளத்தில் வேலை செய்து கொண்டிருப்பவர்களை பார்க்க முடியும் .அதோ… அங்கே பார்வையாளர்களுக்கான வெயிட்டிங் அறையில் இருப்பவன் யார் பார்வையை கூர்மையாக்கி கவனித்து அவனை கண்டுகொண்டாள்.
அவன் முத்துமாணிக்கம் .மதுரா பற்றிய தகவல்களை அவர்களுக்கு கொண்டுவந்த இன்ஸ்பெக்டர். அத்தோடு இப்போது தான் தான் அவனிடம் மற்றொன்றையும் கவனித்து அறிந்தாள் மிருதுளா .அது….
இந்த முத்து மாணிக்கம்தான் முன்பு ஒரு நாள் சாலையில் மகிபாலனுடன் பேசிக்கொண்டு நின்றிருந்தவன் .அப்போது சாதாரண உடையில் இருந்தவன் பிறகு யூனிபார்மோடு வீட்டிற்கு வந்தபோது சட்டென அவனை தன்னால் இனங்காண முடியவில்லை என உணர்ந்தாள்.
ஆக இந்த முத்துமாணிக்கம் தவறான தகவல்களை கொடுத்த மகிபாலன் ஏற்பாடு செய்த ஆளா …?மிருதுளாவின் மனம் வேதனையில் உழன்றது.
What’s your Reaction?
+1
2
+1
2
+1
+1
+1
+1
+1